Monday, February 10, 2014

மொழி – எமர்சன்

மனிதனுக்கு இயற்கையின் மூலம் கிடைத்த மூன்றாவது பயன் மொழி ஆகும். இயற்கை என்ற ஊடகம் மூலம் மொழி மூன்று படி நிலைகளில் மனிதனுள் மொழி உருவாகிறது.

1. மனித மனதிற்குள்ளே உள்ள சகல சொற்களும் இயற்கையில் அவன் கண்டு, அனுபவப்பட்ட ஏதோ ஒன்றின் அடிப்படயிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அவன் அனுபவத்திற்குள் வந்த இயற்கையின் உறுப்பை மற்றொன்றை சுட்டும் சின்னமாக மாற்றி சேர்த்துக் கொள்கிறான். சொற்களின் மூலத்தை தேடிச் சென்றால், ஆதிமொழியில் இயற்கையில் காணக் கிடைக்கும் ஒரு பொருளின் வரைபடத்தில் தான் சென்று முடியும். அதனாலேயே பழங்குடிகளும், குழந்தைகளும் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தை பெயற்சொற்கள் கொண்டு மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

2. முதல் நிலையில் வார்த்தைகள் இயற்கை அங்கங்களின்  குறியீடு என்றால் அடுத்ததாக இயற்கையின் அங்கங்கள் மனித எண்ணங்களின் கூறியீடுகளாக உள்ளன. அவற்றைக் கொண்டே மனிதன் தன் மனவோட்டங்களை வெளிப்படுத்துகிறான். மனித மனம் அருவமான உணர்ச்சிகளுக்கு குறியீடுகளாக இயற்கை செயல்பாடுகளையும், மாறும் அதன் நிலைகளையும் தொடர்புறுத்திக் கொள்கிறது. மாறும் பருவ நிலைகளை மனநிலைகளை உணர்த்தும் உவமைகளாக, பாயும் வேங்கையை வீரனை சுட்டுவதாக, எறும்பின் இயல்பை விடாமுயற்சியின், சுறுசுறுப்பின் சின்னமாக, இன்னும் பல விதங்களில் இயற்கையில் காணகிடைக்கும் செயல்களை தன் மனதின் வெளிப்பாடுகளாக பெரிதாக்கி, மாற்றி அமைத்து தன் மொழியில் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.

Saturday, February 8, 2014

அழகு – எமர்ஸன்

இயற்கையை விளை பொருளாக பார்ப்பதற்கு அடுத்தபடியாக அதை அழகானதாக பார்ப்பதை குறித்து எமர்ஸன் கூறுகிறார். அழகு என்பது புதிய நிறங்கள், புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் சூழ்நிலைகள், கிளர்ச்சியூட்டும் வடிவங்கள் போன்றவற்றை கூறலாம்.

கட்டுரையில் அவர் இயற்கை அழகை மூன்று கூறுகளாக பிரித்துப் பார்க்கிறார். முதல் அழகுணர்ச்சியை இயற்கையின் மூலமாக கிடைக்கும் ஒரு விளைபொருளைப் போலவே மனிதன் உணர்கிறான். அது புறத்தில் உணரப்படும் அழகாகும். அடைந்த கூடத்தில் நெடுநேரம் ஒரு வேலையில் கழித்து விட்டு கடற்கரையின் முன்னாலும், பெரும் இமயங்களுக்கு முன்னலும் போய் நிற்கையில் ஏற்படும் விடுபடலை குறிக்கும் அழகுணர்ச்சி என்று அதைக் கூறலாம். அழகின் அக்கூறை உணர்கையில் அங்கு மனிதனை வந்தடையும் காட்சியில், தொடுகையில், ஒலிகளில் புதியவைகளை கண்டுகொள்வான். ஓடும் நீரிலும், கடலின் பரப்பிலும், அந்தி நேர ஒளியில் மிளிரும் மேகங்களின் வடிவங்கள் வழியே அவன் உணரும் அழகு என்பது வெளியே உள்ளது. அது அவனை அமைதிபடுத்தலாம், சந்தோஷப்படுத்தலாம். ஆனால் சிறிது நேரத்தில் அந்த கூறுகள் பழகிப் போய் மற்றொரு புதிய அனுபவத்திற்காக அவன் தேடல் ஆரம்பமாகிவிடும்.

இரண்டாவது அழகென்பது வெளியே உணரப்படும் அழகினூடே அவன் அகத்தின் உள்ளே செல்லும் பயணமே. அழகென்பது புலன்களின் வழியே தன்னையே காண்பது. அழகின் வெளி ஆபரணங்களை துளைத்து அதில் அழகென தான் உணர்வது எதை என்றும், அவற்றின் எல்லா வடிவங்களிலும் மறையாமல் நின்றிருக்கும் மறை பொருள் என்ன என்றும் தன் அகத்தின் வழியே கேட்டுக் கொள்ளும் கேள்விகளின் பதில்களே அவை. அப்படிபட்ட அழகை கண்டு கொள்ளும் ஒருவனுக்கு ஒவ்வொரு முறையும் புதுப்புது புறக் காட்சிகளும், சூழ்நிலைகளும் தேவைப்படுவதில்லை. வெளிர் வானமும், கூழங்கற்களும், காய்ந்த சருகுகளையும் பார்த்துக் கொண்டு அவனால் வெகு தூரம் அழகை ரசிக்க முடியும். அவற்றினூடே அறுபடாமல் செல்லும் நிலையான ஒன்றை பிடித்துக் கொண்டு செல்ல முடியும். அகபுறம் என்று சொல்லப்படுவதைப் போல புற அழகும், அக அழகும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் நிலை அது என எமர்ஸன் குறிப்பிடுகிறார். இதுவே அழகில் தெய்வீகத்தைக் காண்பது எனலாம்.
அகங்காரம் அழிந்த நிலையில் கண்களை மட்டும் வைத்து இயற்கையை உள்வாங்கிக் கொண்டு உள்ளும், புறமும் வேறுபாடில்லாமல் காணும் அழகை விட உயர்ந்ததாக அவர் கூறும் மூன்றாவது நிலை- அந்த அழகை மனிதன் உருவாக்கும் நிலை என்பதாகும். இயற்கையில் தான் காணும் அழகை முழுவதுமாக உள்வாங்கி அதை கலையாக வெளிப்படுத்தும் பொழுது அவன் இயற்கை அழகை உணர்வதன் அதிகபட்ச சாத்தியத்தை எட்டுகிறான் எனலாம். இயற்கையின் அழகு மனிதனின் அகம் வழியே மறுவாக்கம் செய்யப்படும் பொழுது அதன் ஒரு துளி முடிவிலா ஒன்றை சுட்டிக் காட்டி நிற்கிறது. அதை உருவாக்குவதே கலையின் நோக்கமாக இருக்க முடியும். இயற்கை அழகின் ஆதாரத்தை பிரதிபலிக்கும் எந்தவொரு படைப்பும் அதன் உள்ளே உண்மை, நன்மை, அழகு என்ற முக்குணங்களையும் கொண்டிருக்கும் என்கிறார்.
இயற்கை இருப்பதற்கான காரணம் என்ற கேள்விக்கும் அதன் அழகு என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் அது மட்டுமே இறுதி உண்மை என்றாகி விடாது என முடிக்கிறார்.

Thursday, April 11, 2013

முந்திரி காட்டு வாழ்க்கை – உயிர் தண்ணீர் சிறுகதை தொகுப்பு


முந்திரி காடுகளை மையமாக கொண்ட அடித்தள மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதைகளே கண்மணி குணசேகரனின் உயிர் தண்ணீர் சிறுகதை தொகுப்பு. முதல் தொகுதி அந்த  குடும்பங்களின் பெண்களை மையமாக கொண்டும் மறு பாதி ஆண்களை மையமாக கொண்டும் உருவாக்கப்பட்ட சிறுகதைகளை கொண்டுள்ளது. சாதி அடுக்கிலும், பொருளாதார நிலையிலும் அடித்தளத்தில் உள்ள மனிதர்களின் வாழ்கை அவர்களின் வட்டார வழக்கிலேயே கதைகளாக விரிகின்றன. எனக்கு மிகவும் பிடித்த சில கதைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அழுத்தி கொண்டிருக்கும் வறுமை, சீக்கிரத்தில் விட்டு கொடுக்க முடியாத தன்மானம், குடும்ப மானம், இவைகளுக்கு இடையில் மனிதனுக்கே உரிய சிறு ஆசைகளையும், ஏக்கங்களையும் கொண்ட மனது என பெண்களின் வாழ்கை தருணங்கள் முதற் பாதியின் கதைகளாக உள்ளன. 

Saturday, February 23, 2013

எல்லா நாளும் கார்த்திகை – பவா செல்லதுரை


கால இடைவெளி அதிகரிக்கும் தோறும், கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கையில் சிறு சம்பவங்கள் நினைவிலிருந்து உதிர்ந்து விடுகின்றன. தீவிரமான அனுபவங்கள் சுருங்கி அவற்றின் சாரம் மட்டுமே மனதில் எஞ்சுகிறது. அவைகளை மீட்டெடுக்கையில் சரி, தப்பு, வீண், வேடிக்கை என ஒரு மன உணர்வாகவே வெளி வருகிறது. முன்பொரு காலத்தில் நாம் சந்தித்த, பழகிய, பயணித்த மனிதர்களும் அப்படிப்பட்ட அசையா பிம்பங்களாகவே மனதில் தங்கி விடுகின்றனர். குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும், வேலையிடத்திலும் என் மனதில் தங்கி விட்ட ஆளுமைகளின் பிம்பங்கள் குறிப்பிட்ட சில சம்பவங்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டன. இப்படித்தான் எல்லோரும் ஞாபக சேமிப்புகளை மனதிற்குள் அடுக்கி வைத்திருப்பார்களாக இருக்கலாம்.

Monday, February 18, 2013

கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா


தமிழில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இளைய தலைமுறை எழுத்தாளர்களுள் ஒருவர் கீரனூர் ஜாகிர்ராஜா. சமீபத்தில் அவர் எழுதி, ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள நாவல் ‘கருத்த லெப்பை.

எழுபது பக்கங்களுக்கும்  குறைவான இந்த நாவல் கருத்த லெப்பை என்கிற ஜபருல்லாஹ் என்ற இளைஞனின் கதையை சொல்வதாகும்.

லெப்பை என்பவர்கள் வசதியில் ராவுத்தர்களை விட குறைந்தவர்கள், அதனால் அதிகாரம் என்று எதுவுமில்லாதவர்கள். முன்பு குதிரை வியாபாரம் செய்து, பிறகு கயிறு வியாபாரம் செய்து வரும் ராவுத்தர்களுக்கு ஓதிக் கொடுத்தும், அவர்களுடைய கடை நிலை அலுவல்கள் செய்தும் லெப்பைகள் வாழ்கிறார்கள். ராவுத்தர்கள் வீட்டிற்கு முறுக்கு சுட்டுக் கொடுக்கும் பாத்துமாவின் இளைய மகன் கருத்த லெப்பை. அவனுடைய அக்கா ருக்கையா. அவர்களுடைய அப்பா ராவுத்தர் குடும்பங்களில் ஓதிக் கொடுத்தும், எடுபிடி வேலையும் செய்கிறார் என்றாலும் கூட வீட்டின் வருமானம் பாத்துமாவை நம்பி தான் உள்ளது.

Monday, December 10, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 10 - இறுதி கடிதம்

பாரீஸ்,
கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள், 1908

உங்களுடைய அன்பு மிகுந்த கடிதத்தை அடையப் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், கப்பஸ். நீங்கள் சொல்லியிருந்த செய்திகள் யாவும் நற்செய்திகளே. அவற்றை மறுபடியும் மனதில் அசைப் போட்டு பார்க்கையில், அதிலிருந்த உள்ளார்ந்த வெளிப்பாடுகளும், உண்மையும் அதை மறுபடியும் ஒரு நற்செய்தியாகவே மனதில் எழச் செய்கிறது. இதைத் தான் கிறுஸ்துமஸ் அன்று உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன். ஆனால் என் படைப்புகளில் இந்த குளிர்காலம் முழுவதும் செலவிட்டுக் கொண்டிருந்தமையால், பழம் பெரும் பண்டிகை தினம் வந்ததையே நான் உணரவில்லை. அதனால் இறுதி நேரங்களில் சில்லறை வேலைகள் செய்வதற்கே நேரம் போதவில்லை, எழுதுவதும் சேர்த்து.
ஆனால் கிறுஸ்துமஸ் அன்று உங்களைக் குறித்து பல முறை எண்ணிக் கொண்டிருந்தேன். என் மனதில், வெளியே கோட்டைச் சுவர்களை கிழித்து எறிந்து விடப் போவது போல தென்காற்று வீசிக் கொண்டிருக்கையில், யாருமற்ற மலைகளின் மத்தியில் கோட்டைக்குள்ளே தனிமையில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தேன்.

Friday, December 7, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 9

ஃபுரோபெர்க், ஸ்வீடன்
நவம்பர் 4, 1904

அன்புள்ள கப்பஸ்,

கடிதம் அனுப்ப இயலாத இடைப்பட்ட காலங்களில் நான் பகுதி பயணத்திலும், பகுதி அதிக வேலைப் பளுவுடன் இருந்தேன். இன்றும் கூட எழுதுவதற்கு சிரமமாக உள்ளது ஏனென்றால் நிறைய கடிதங்களை எழுதி கை வலியெடுக்கிறது.  நான் உரைக்க மற்றொருவர் எழுதுவதாக இருந்தால் உங்களிடன் கூடுதலாக பேசியிருப்பேன். ஆனால் இன்றைய நிலையில் உங்களுடைய நீண்ட கடிதத்திற்கு என்னுடைய சில சொற்களை பதிலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அன்புடைய கப்பஸ், உங்களைக் குறித்து பல முறை நான் எண்ணிக் கொள்வதுண்டு. என் எண்ணங்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் எப்போதாவது உங்களுக்கு நன்மையளிக்கும். என் கடிதங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என பல தருணங்களில் நான் ஐயம் கொள்வதுண்டு. “ஆமாம் அவை உதவியாக உள்ளன” என சொல்லாதீர்கள். நன்றிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவைகளிலிருந்து என்ன வெளிவருகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். 

Thursday, December 6, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 8

ஃப்ளாடி, ஸுவீடன்,
ஆகஸ்ட் 12, 1904.

அன்புள்ள கப்பஸ், 
நான் பேசும் விஷயங்கள் உங்களுக்கு எவ்வகையிலும் உதவி புரியாது என்றபோதும், உங்களுடன் இன்னும் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு உதவக் கூடிய சொற்களை கண்டெடுக்க என்னால் முடியவில்லை. உங்களுக்கு பல துயரங்கள் உள்ளன, உங்களை விலகி சென்றுவிட்ட  பெரும் துயரங்கள். சமீபத்தில் உங்களை கடந்து சென்ற மனத்துயரம் மிகுந்த கடினமாக இருந்ததாக கூறியிருந்தீர்கள். தயவு கூர்ந்து, உங்களிடமே கேட்டுப் பாருங்கள், இத்தகைய பெரும் சோகங்கள் கூட உங்களினூடே கடந்து போய் விட்டன அல்லவா? உங்களுக்குள்ளே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்; எங்கோ, உங்கள் இருப்பின் ஆழங்களில் சோகத்துடன் இருந்த சமயங்களில் முக்கியமான மாறுதல்களை நீங்கள் அடைந்திருக்கக்கூடும். சோகங்களிலே மிகவும் அபாயமானவை, பொதுவெளியில் நாம் சுமந்து செல்லும் துயரங்களே. புறத்தில் உள்ள கூச்சலில் மூழ்கடிப்பதற்காக நாம் கொண்டு அலையும் மனத் துயரங்கள், முட்டாள்தனமாகவும், மேம்போக்காகவும் சிகிழ்ச்சையளிக்கப் பட்ட நோயை போன்றவையாகும்; சிறிது காலத்திற்கு பின்வாங்கிக் கொண்டு பிறகு அதிக கொடூரத்துடன் கட்டவிழ்த்து வெளிவரும்; நமக்குளே சேகரம் ஆகி, நம் வாழ்க்கையாகி விடும் – நாம் வாழ இயலா வாழ்க்கை, நிராகரிக்கப் பட்ட, இழக்கப்பட்ட, மரணத்தை கொண்டு சேர்க்கும் வாழ்க்கை. நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க முடிந்தால், நம் முன்னெண்ணங்களின் வெளிக் கட்டுமானங்களைத் தாண்டி அறிய முடிந்தால், துயரங்களை, மகிழ்ச்சியான பொழுதுகளை விட அதிக நம்பிக்கையுடன் தாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் துயரத்தின் பொழுதுகளில் தான் நாமறியா ஒன்று நம்முள் நுழைகிறது; நமது உணர்ச்சிகள் , சங்கோஜத்துடன் மௌனமாகின்றன, நம்முள்ளே உள்ள அத்தனையும் பின்வாங்குகின்றன, அமைதி எழுகிறது, புதியதொரு அனுபவம், யாரும் அறிந்திராத அனுபவம், எல்லாவற்றிற்கும் நடுவில் ஒன்றுமே கூறாமல் நிற்கிறது.

Monday, November 19, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 7

ரோம்,
மே 14, 1904

அன்புள்ள திரு. கப்பஸ்,
கடைசியாக நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அதற்கு பதிலளிக்காததற்காக என் மீது வருத்தம் கொள்ளாதீர்கள். முதலில் வேலைப் பளு, பிறகு பல இடைஞல்கள், இறுதியாக தொடர்ந்து கொண்டேயிருக்கும் உடல் நலக்குறைவு எல்லாம் சேர்ந்து என்னை பதிலளிக்க விடவில்லை: ஏனென்றால் என் பதிலகள் அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியான நாட்களில் இருந்து உங்களை அடைய வேண்டும் என விரும்பினேன். இப்போது உடல் நிலை மறுபடியும் சீரடைந்தது போல உணருகிறேன் ( வசந்த காலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் சீதோஷண நிலைமாற்றங்களை இங்கும் தாங்கிக் கொள்ள கடினமாக உள்ளது). திரு. கப்பஸ் மறுபடியும் என் வாழ்த்துக்களை சொல்லி உங்களுடன் அதைப் பற்றியும், உங்களுடைய கடிதத்திற்கான பதிலையும் என்னால் இயன்ற வரை பேச முயற்சிக்கிறேன்.

நீங்கள் அனுப்பிய பாடலை பிரதி எடுத்துள்ளேன் ஏனென்றால் அது அற்புதமானதாகவும், எளிமையுடன் மனதிற்குள் நுழைய கூடியதுமாக இருந்தது. நீங்கள் எனக்கு வாசிக்க அனுப்பிய கவிதைகளில் அதுவே மிகச் சிறந்த கவிதையாகும். இப்போது நான் எடுத்த பிரதியை உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனென்றால் மற்றவருடைய கையெழுத்தில் தன்னுடைய படைப்பை வாசிப்பதால் கிடைக்கும் புதிய அனுபவங்கள் மிகவும் முக்கியமானது என நான் அறிவேன். இந்த கவிதையை இதற்கு முன் அறிந்திராதது போல வாசித்துப் பாருங்கள்; உங்கள் மனதின் ஆழத்தில் அக்கவிதை உங்களுக்கேயானது என உணர்வீர்கள்.

Friday, November 2, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 6

ரோம்,
டிசெம்பர் 23, 1903

என் அன்பிற்குரிய கப்பஸ்,
என்னிடமிருந்து வாழ்த்துச் செய்தி இல்லாமல் உங்களுடைய கிறுஸ்துமஸ் நாள் அமைவதில் எனக்கு விருப்பமில்லை. அதுவும் இந்த விடுமுறை தினங்களின் மத்தியில் தனிமையை கூடுதல் பாரத்துடன் நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில். ஆனால் அந்த தனிமை மிகுந்த விரிவை உடையது என்பதை நீங்கள் கண்டு கொண்டால் மகிழ்ச்சியடைவீர்கள். (நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது) இத்தனை விரிவை அடையாத தனிமை உண்டென்றால் அது என்ன; இங்கிருப்பது ஒரே ஒரு தனிமை தான், அது மிகவும் விசாலமானது, சுமப்பதற்கு மிகவும் சிரமானதும் கூட. ஏறத்தாழ அனைவருமே, தங்களுடைய வாழ்க்கையில் சில மணி நேரங்களாவது மனமுவந்து சக மனிதர்களுடன் கூடிப் பழகுவதற்கும் – அது எத்தனை அற்பமான, மதிப்பற்ற விஷயமாக இருந்தாலும் – அடுத்தவரிடம் வெளிப்படையாக சிறு வகையிலாவது ஒத்துப் போவதற்கும் விரும்புவான். ஆனால் இந்த சில மணி நேரங்கள் தான் தனிமை நம்முள்ளே பெரிதாக நிறையும் பொழுதுகளாக இருக்கலாம்; ஏனென்றால் தனிமையின் வளர்ச்சி, சிறுவர்களின் வளர்ச்சியைப் போலவும் அல்லது வசந்த காலத்தின் தொடக்கத்தைப் போலவும் மிகவும் துயரமானதாகும். ஆனால் அது உங்களை குழப்பிவிடக் கூடாது. இறுதியில், அவசியமானது என்பது இது தான்: ஏகாந்தம், மிகவும் விசாலமடைந்த ஏகாந்தம். உங்களுக்குளே பல மணி நேரங்கள் யாரையும் கண்டடையாமல் தனியாக நடத்தல் – அது தான் நீங்கள் அடைய வேண்டியது. குழந்தையாக இருந்த போது மூத்தவர்கள் உங்களைச் சுற்றி அவர்களுக்கே உரிய பெரியதும், முக்கியமானதுமாகிய விஷயங்களில் ஆழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கையில், அவர்கள் செய்யும் காரியங்கள் எதையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்திருப்பீர்கள். இன்று நீங்கள் அடைய வேண்டியது அந்த குழந்தையின் தனிமையையே.