Friday, August 10, 2012

கவிதை விவாதத்தின் அவசியம்

நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால் தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.

Saturday, August 4, 2012

இசைச் செவி


சில வாரங்களாக வலிந்து வேலைக்கு காரில் போய் வருகையிலும், வீட்டில் கணினியில் இணையத்தில் மேய்கையிலும் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மரபிசையில் அதிக நாட்டமோ பழக்கமோ இல்லாதிருந்ததால், இப்போது மனதை பழக்கிக் கொள்ள இசை கேட்கும் செயலை ‘வலிந்து’ செய்ய வேண்டியுள்ளது. எனக்கு செவியுணர்வு ஒப்பிடுகையில் குறைவு என யூகித்து வைத்திருக்கிறேன். இந்த நாட்களில், மரபிசையை கேட்டு அவதானித்ததில் அந்த யூகம் இன்னும் நிச்சயமாக மனதில் பதிந்து விட்டது.

என்னுடன் முதுகலையில் ஒரே அறையில் வசித்த நண்பன் தேர்ந்த கர்நாடக வயலின் இசையாளன். அவனிடம் நான் ஒரு பாட்டின் இரு வரிகளை கேட்டவுடனேயே ராகங்களை கண்டு கொள்ளும் சிலருடைய திறமையை வியந்து கொண்டிருக்கையில், அவன், அது கடினமான விஷயமேயில்லை என்றும், இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் அத்திறமை எளிதில் சாத்தியப்படும் என்றும் பதிலளித்தான். அந்த உரையாடலுக்கு ஒரு வாரம் முன்பே மரபிசையை கேட்க ஆரம்பித்துவிட்டதால், மனதில் புது உற்சாகத்துடன் இசை கேட்டலைத் தொடர்ந்தேன். ஆனால் என் நம்பிக்கைப்படி அல்லது நண்பனின் நிபுண கருத்துப்படியோ இசைக் கட்டுமானத்தின் இணைப்புகளையும், அதன் வடிவங்களையும் மனதால் பகுத்தறிய இயலவில்லை.