Tuesday, October 23, 2012

விவாத சூழல்

நண்பர் ஒருவருடன் காலை நடையின் போது இலக்கியம் குறித்தும், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அந்த விவாதம் தீர்க்கமான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தினசரி வாழ்க்கையை குறித்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்தின் இடையே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தலைப்பு உள்ளே நுழைந்து விட்டது. முடிவில் அது சுவாரசியமான விவாதமாக அமைந்தது. அதன் தலைப்பு தோராயமாக இப்படி வைத்துக் கொள்ளலாம் – “மனிதனுக்கு கலை, இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வம் பிறப்பிலேயே எழுகிறதா அல்லது தொடர் பயிற்சியின் விளைவாக உருவாவதா?” எங்களுடைய நிலைப்பாடு அந்த கட்டுரையுடன் உடன்பட்டும், எதிர்த்தும் இருக்கவில்லை. இங்கு விவாதத்திற்கு உள்ளானது அக்கட்டுரையை குறித்த எங்களுடைய நுண்புரிதல்கள் மட்டுமே.

விவாதத்தின் முடிவு என்ன, அப்போது பகிரப்பட்ட கருத்துக்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படவில்லை. எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து அதைப் பற்றி – விவாத சூழலைப் பற்றி – யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்கள் புலப்பட்டன. அவைகளே இங்கு பகிரப்பட உள்ளன.

Sunday, October 21, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 5

ரோம்,
அக்டோபர் 29, 1903

உங்களுடைய கடிதம் ஆகஸ்ட் 29 அன்று ஃப்ளோரன்ஸ் நகரத்தில் என்னை வந்தடைந்தது; அதற்கு மிகவும் தாமதமாக – இரண்டு மாதங்கள் கழித்து – பதிலளிக்கிறேன். என்னுடைய மெத்தனத்தை மன்னிக்கவும். நான் பயணம் செல்லுகையில் கடிதம் எழுதுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் கடிதம் எழுதுவதற்கு மிக அத்தியாவசியமான உபகரணங்களுடன் சேர்த்து அமைதியும், ஏகாந்தமும், மிகவும் பரிச்சயமற்ற நேரமும் எனக்கு தேவைப்படுகிறது.

நாங்கள் ஆறு வாரங்களுக்கு முன், ஆட்களற்ற, வெக்கை மிகுந்த ரோம் நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த சூழ்நிலையில், தங்குவதற்கு ஏற்ற இடம் கிடைப்பதற்க்கு உண்டான பிரச்சனைகளால், எங்களை சூழ்ந்திருந்த அமைதியின்மை முடிவற்றது போல தோன்றியது. அதோடு, ரோம் நகரம் ( அதோடு பழக்கப்படுத்திக் கொள்ளாதவருக்கு) ஒருவரை ஆரம்ப நாட்களில் துயரத்தால் கட்டிப் போட்டுவிடுகிறது. அதற்கு காரணம் இந்நகரத்தின் ஜீவனற்ற அருங்காட்சியகத்தை ஒத்த சூழல்; கடந்த காலங்களின் செல்வ செழிப்புகளை வலிந்து முன்னே கொண்டு வந்து (கடந்த கால செழிப்புகளை நம்பி தற்காலத்தின் ஒரு சிறு பகுதி வாழ்ந்து வருகிறது), கல்விமான்களாலும், கலை ஆர்வலர்களாலும் மட்டுமீறிய அளவிற்கு அவற்றின் மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.  அவர்களின் நகலாக நடந்து கொள்ளும் இத்தாலியின் சராசரி சுற்றுலாப் பயணி பார்ப்பவை எல்லாம் மற்றொரு காலகட்டத்தின், நம்மைச் சாராத மற்றொரு வாழ்க்கை சூழலின் தற்செயலாக எஞ்சியுள்ள சிதைந்து, அழிந்து கொண்டிருக்கும் பொருட்களே;  இறுதியில், சில வாரங்கள் மன எதிர்ப்பு கழிந்த பின் ஒருவர் இந்நகரில் மிச்சமிருக்கும் சிறு குழப்பத்துடன் சமநிலையை அடைய முடியும். பிறகு தனக்குத் தானே ஒருவர் சொல்லிக் கொள்வது: “மற்ற இடங்களை விட இந்த இடம் கூடுதல் அழகுடையது அல்ல. தலைமுறைகளாக போற்றப்பட்டும், மிகச் சிறந்த பணியாளர்களின் கைகள் கொண்டு செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்படும் இப்பொருட்களில் மதிப்போ, அழகோ, உணர்வோ எதுவும் இல்லை, இல்லவே இல்லை”.

Friday, October 12, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 4

வார்ப்ஸ்விட், ப்ரீமென் நகரின் அருகில்,
ஜூலை 16, 1903

சுமார், பத்து நாட்களுக்கு முன் பாரீஸிலிருந்து, தளர்ச்சியும் உடல் நலக்குறைவுடனும், கிளம்பி இந்த அற்புதமான வட சமவெளிப் பகுதிக்கு வந்தேன். இந்த பகுதியின் விசாலமும், அமைதியும், வானமும் என்னை மறுபடியும் சுகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட மழை காலத்தின்  நடுவினில் வந்து சேர்ந்தேன்; அமைதியின்றி ஓலமிட்டுக் கொண்டிருந்த நிலவெளி இன்று தான் முதல் முறையாக அடங்கியது. பிரகாசமான இக்கணத்தில் என் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன், ஐயா.

என் அன்பிற்குரிய திரு. கப்பஸ்: உங்கள் கடிதமொன்று வெகு காலமாக பதிலளிக்கப்படாமல் என்னிடம் உள்ளது; நான் அதை மறந்து விட்டேன் என்பதனால் அல்ல. மாறாக பல கடிதங்களின் மத்தியில் அதைக் காணும் போதெல்லாம் மறுபடியும் வாசிக்க வைக்கும் கடிதம் அது. அக்கடிதத்தில் நீங்கள் எனக்கு மிக அருகில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்.  அது நீங்கள் மே மாதம் இரண்டாம் நாள் அனுப்பிய கடிதம்; நிச்சயமாக உங்களுக்கு அக்கடிதம் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இத்தருணத்தில், தொலைதூரத்தில் உள்ள இவ்விடத்தின் அமைதியில் அக்கடிதத்தை வாசிக்கையில், வாழ்க்கையை நோக்கிய உங்களுடைய இனிமையான பதட்டம் என் மனதை உருக்குகிறது – பாரீஸில் இருந்ததை விட மேலாகவே, ஏனென்றால் அங்கு அளவிற்கு அதிகமான கூச்சலால், சகலமும் எதிரொலித்து தேய்ந்து மாறிப் போய்விடுகிறது. இங்கே, கடல் காற்று அசைந்து செல்லும் மிகப்பெரிய நிலவெளியால் சூழப்பட்ட இடத்தில், எனக்கு தோன்றுவது என்னவென்றால்: ஆழங்களில் தமக்கென ஒரு வாழ்க்கையை கொண்டிருக்கும் உங்களுடைய கேள்விகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கக் கூடியவர் எங்கேயும் இல்லை. நினைத்ததை தெளிவாக உரைக்கும் திறமை கொண்டவர் கூட உங்களுக்கு உதவி செய்ய இயலாது, ஏனென்றால் அவ்வார்த்தைகள் சுட்டுவது சொல்லிவிட முடியாத,  நுண்மையான ஒன்றை பற்றியே. இருந்தாலும் கூட, இந்த தருணத்தில் என் கண்களின் முன்னால் உள்ள காட்சியைப் போன்ற விஷயங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்தால், உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே இருந்து விடாது என நான் எண்ணுகிறேன். இயற்கையின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால், அதில் யாரும் கவனிக்காமல் விடும் சிறு விஷயங்கள் திடீரென்று அளவிட முடியாத பிரம்மாண்டத்தை அடைந்து விடும்; எளியவைகளின் மீது நீங்கள் அன்பு கொள்வீர்கள் என்றால்; அந்த அன்பை சேவகம் செய்பவரைப் போல, ஒரு ஏழையின் நம்பிக்கையை அடைவதற்கு என்பதைப் போல; மிகவும் அடக்கத்துடன் பிரயோகிப்பீர்கள் என்றால்; கூடுதல் ஒத்திசைவுடனும், சமரசத்தோடும் சகல காரியங்களும் உங்களுக்கு எளிதாகிவிடும்; உங்களுடைய விழிப்பு நிலையில் அப்படி தோன்றாவிட்டாலும், ஆழ் மனதின் அறிவில் தெரிந்துவிடும். 

Friday, October 5, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 3

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 23, 1903

ஈஸ்டர் திருநாளுக்காக அனுப்பிய கடிதம் மூலம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தீர்கள். ஏனென்றால், அக்கடிதம் உங்களை பற்றிய நல்ல செய்திகளை கூறியது மற்றும் ஜேகப்ஸனின் உன்னதமான கலையை பற்றி நீங்கள் கூறிய விதம், உங்கள் வாழ்க்கையையும் அதன் கேள்விகளையும் இந்த செல்வத்தை நோக்கி நான் தவறாக வழிகாட்டவில்லை என உணர்த்தியது.

இனி ‘நீல்ஸ் லைன்’நாவல் அலங்காரமும், ஆழமும் நிறைந்த ஒரு புத்தகத்தை உங்களுக்கு திறந்து கொடுக்கும். ஒருவர் அதை மறுபடியும் வாசிக்கையில், மேலும் அதில் - வாழ்க்கையின் நுட்பமான வாசனைகளில் தொடங்கி அதன் மிகப் பெரிய கனிகள் வரை - அனைத்தும் அடங்கியிருப்பது போல தோன்றும். அந்த புத்தகத்தில் புரிந்து கொள்ள முடியாதது என்றோ, வாழப்படாதது என்றோ, நினைவுகளின் ஊசலாட்டத்தின் எதிரொலியில் அறிந்திராதது என்றோ எதுவும் இல்லை. அதில் எந்த அனுபவமும் முக்கியமற்றது அல்ல; விதியின் படி நடப்பது போல சிறு சம்பவங்களும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும், விதியே கூட ஒரு அகண்ட விந்தையான துகில் – அதன் ஒவ்வொரு இழையும் முடிவிலா மென்மையை கொண்ட கைகளால் எடுக்கப்பட்டு, இன்னொரு இழையின் அருகாமையில், இன்னும் நூறு இழைகளால் தாங்கப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது – போலிருக்கும். முதல் முறை வாசிக்கையில் நீங்கள் மிகுந்த சந்தோஷத்தை உணர்வீர்கள் மேலும் அதன் எண்ணிலடங்கா ஆச்சரியங்களை கனவிலிருப்பது போல் கடந்து செல்வீர்கள். பின்னர் இந்த புத்தகங்களை மறுபடியும் பலமுறை இதே திகைப்புடன் வாசிக்கையில், அவை தம்முடைய அற்புதமான ஆற்றல்களையும், நம்மை கவர்ந்திழுக்கும் தன்மையையும், முதல் முறை  வாசிப்பதை போலவே கொஞ்சமும் இழந்துவிடுவதில்லை என்றே கூறுவேன்.