எழுத வேண்டும் என யோசித்து யோசித்து பல வருடங்கள் கடந்து விட்டது. இறுதியில், "ஏன் எழுதவில்லை?", என்ற தலைப்பு மட்டும் தான் என்னால் எழுத முடியும் என்றாகிவிட்டது.
ஒரு பத்தி, கட்டுரை அல்லது கதையை படிக்கும் சமயத்தில், நானும் இது போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலெழும், பிறகு அடுத்த வாசிப்பு வரை அது காணாமல் போய்விடும். பயணங்களின் போது, ஒரு திரைபடத்தை அல்லது ஆவண படத்தை பார்க்கும் போது, தனிமையில் பொழுதை கழிக்கும் போது, மன நெருக்கடியில் தவிக்கும் போது என்று பல பல நேரங்களில், மனதில், எழுதுவதற்கான 'கரு' என்று ஒன்று உருவாகி, சில கணங்கள் தங்கிவிட்டு செல்லும். அந்த நேரத்தில் மறுபடியும் 'எழுத வேண்டும்' என்ற எண்ணம் மேலெழுந்து, கற்பனையில் அந்த கருவின் தனித்துவத்தை பொறுத்து, ஒரு நிமிடமோ அரை நிமிடமோ அதை நான் எழுதுவதை போன்ற நிகழ்வு வேறொரு காலவெளியில் நடந்தேறும். அதை தொடர்ந்து நிழலை போல, "இதில் எழுத என்ன இருக்கிறது? இதை விட நிறைய தோன்றினால் எழுதலாம்!!" என்ற தணிக்கை நினைப்பு முழுவதுமாக மனதில் படரும். இறுதியில் நிழலையே
நம்பினேன்.
எதை பற்றி எழுதுவது? சின்ன விஷயமா? பெரிய விஷயமா? எப்படி எழுதுவது? நடந்ததை அப்படியே எழுதுவதா அல்லது நடந்ததை என் விருப்பு வெறுப்பு வழியாக எழுதுவதா? இல்லை அவற்றை ஒரு குறியீடாக வைத்து வேறொரு விஷயத்தை சொல்லவா? அல்லது.... இப்படி எல்லா கேள்விகளுக்கும், 'தள்ளி போடு', என்ற ஒற்றை பதிலை கொடுத்து விலகினேன்.
மனதின் கேள்விகள் உயிரியலில் படித்த 'அமீபா' போன்றது. அறுத்து இரண்டாக போட்டால் சில நாட்கள் கழித்து இரு வேறு வினாக்களாக எழுந்து நின்றன. புரியாமல் பல முறை அறுத்ததால், என்னை சுற்றி பல கேள்விகள்.