வார்ப்ஸ்விட்,
ப்ரீமென் நகரின் அருகில்,
ஜூலை
16, 1903
சுமார்,
பத்து நாட்களுக்கு முன் பாரீஸிலிருந்து, தளர்ச்சியும் உடல் நலக்குறைவுடனும், கிளம்பி
இந்த அற்புதமான வட சமவெளிப் பகுதிக்கு வந்தேன். இந்த பகுதியின் விசாலமும், அமைதியும்,
வானமும் என்னை மறுபடியும் சுகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட மழை காலத்தின் நடுவினில் வந்து சேர்ந்தேன்; அமைதியின்றி ஓலமிட்டுக்
கொண்டிருந்த நிலவெளி இன்று தான் முதல் முறையாக அடங்கியது. பிரகாசமான இக்கணத்தில் என்
வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன், ஐயா.
என்
அன்பிற்குரிய திரு. கப்பஸ்: உங்கள் கடிதமொன்று வெகு காலமாக பதிலளிக்கப்படாமல் என்னிடம்
உள்ளது; நான் அதை மறந்து விட்டேன் என்பதனால் அல்ல. மாறாக பல கடிதங்களின் மத்தியில்
அதைக் காணும் போதெல்லாம் மறுபடியும் வாசிக்க வைக்கும் கடிதம் அது. அக்கடிதத்தில் நீங்கள்
எனக்கு மிக அருகில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்.
அது நீங்கள் மே மாதம் இரண்டாம் நாள் அனுப்பிய கடிதம்; நிச்சயமாக உங்களுக்கு
அக்கடிதம் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இத்தருணத்தில், தொலைதூரத்தில் உள்ள இவ்விடத்தின்
அமைதியில் அக்கடிதத்தை வாசிக்கையில், வாழ்க்கையை நோக்கிய உங்களுடைய இனிமையான பதட்டம்
என் மனதை உருக்குகிறது – பாரீஸில் இருந்ததை விட மேலாகவே, ஏனென்றால் அங்கு அளவிற்கு
அதிகமான கூச்சலால், சகலமும் எதிரொலித்து தேய்ந்து மாறிப் போய்விடுகிறது. இங்கே, கடல்
காற்று அசைந்து செல்லும் மிகப்பெரிய நிலவெளியால் சூழப்பட்ட இடத்தில், எனக்கு தோன்றுவது
என்னவென்றால்: ஆழங்களில் தமக்கென ஒரு வாழ்க்கையை கொண்டிருக்கும் உங்களுடைய கேள்விகள்
மற்றும் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கக் கூடியவர் எங்கேயும் இல்லை. நினைத்ததை தெளிவாக
உரைக்கும் திறமை கொண்டவர் கூட உங்களுக்கு உதவி செய்ய இயலாது, ஏனென்றால் அவ்வார்த்தைகள்
சுட்டுவது சொல்லிவிட முடியாத, நுண்மையான ஒன்றை
பற்றியே. இருந்தாலும் கூட, இந்த தருணத்தில் என் கண்களின் முன்னால் உள்ள காட்சியைப்
போன்ற விஷயங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்தால், உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே
இருந்து விடாது என நான் எண்ணுகிறேன். இயற்கையின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால்,
அதில் யாரும் கவனிக்காமல் விடும் சிறு விஷயங்கள் திடீரென்று அளவிட முடியாத பிரம்மாண்டத்தை
அடைந்து விடும்; எளியவைகளின் மீது நீங்கள் அன்பு கொள்வீர்கள் என்றால்; அந்த அன்பை சேவகம்
செய்பவரைப் போல, ஒரு ஏழையின் நம்பிக்கையை அடைவதற்கு என்பதைப் போல; மிகவும் அடக்கத்துடன்
பிரயோகிப்பீர்கள் என்றால்; கூடுதல் ஒத்திசைவுடனும், சமரசத்தோடும் சகல காரியங்களும்
உங்களுக்கு எளிதாகிவிடும்; உங்களுடைய விழிப்பு நிலையில் அப்படி தோன்றாவிட்டாலும், ஆழ்
மனதின் அறிவில் தெரிந்துவிடும்.