Monday, December 10, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 10 - இறுதி கடிதம்

பாரீஸ்,
கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள், 1908

உங்களுடைய அன்பு மிகுந்த கடிதத்தை அடையப் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், கப்பஸ். நீங்கள் சொல்லியிருந்த செய்திகள் யாவும் நற்செய்திகளே. அவற்றை மறுபடியும் மனதில் அசைப் போட்டு பார்க்கையில், அதிலிருந்த உள்ளார்ந்த வெளிப்பாடுகளும், உண்மையும் அதை மறுபடியும் ஒரு நற்செய்தியாகவே மனதில் எழச் செய்கிறது. இதைத் தான் கிறுஸ்துமஸ் அன்று உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன். ஆனால் என் படைப்புகளில் இந்த குளிர்காலம் முழுவதும் செலவிட்டுக் கொண்டிருந்தமையால், பழம் பெரும் பண்டிகை தினம் வந்ததையே நான் உணரவில்லை. அதனால் இறுதி நேரங்களில் சில்லறை வேலைகள் செய்வதற்கே நேரம் போதவில்லை, எழுதுவதும் சேர்த்து.
ஆனால் கிறுஸ்துமஸ் அன்று உங்களைக் குறித்து பல முறை எண்ணிக் கொண்டிருந்தேன். என் மனதில், வெளியே கோட்டைச் சுவர்களை கிழித்து எறிந்து விடப் போவது போல தென்காற்று வீசிக் கொண்டிருக்கையில், யாருமற்ற மலைகளின் மத்தியில் கோட்டைக்குள்ளே தனிமையில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தேன்.

Friday, December 7, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 9

ஃபுரோபெர்க், ஸ்வீடன்
நவம்பர் 4, 1904

அன்புள்ள கப்பஸ்,

கடிதம் அனுப்ப இயலாத இடைப்பட்ட காலங்களில் நான் பகுதி பயணத்திலும், பகுதி அதிக வேலைப் பளுவுடன் இருந்தேன். இன்றும் கூட எழுதுவதற்கு சிரமமாக உள்ளது ஏனென்றால் நிறைய கடிதங்களை எழுதி கை வலியெடுக்கிறது.  நான் உரைக்க மற்றொருவர் எழுதுவதாக இருந்தால் உங்களிடன் கூடுதலாக பேசியிருப்பேன். ஆனால் இன்றைய நிலையில் உங்களுடைய நீண்ட கடிதத்திற்கு என்னுடைய சில சொற்களை பதிலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அன்புடைய கப்பஸ், உங்களைக் குறித்து பல முறை நான் எண்ணிக் கொள்வதுண்டு. என் எண்ணங்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் எப்போதாவது உங்களுக்கு நன்மையளிக்கும். என் கடிதங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என பல தருணங்களில் நான் ஐயம் கொள்வதுண்டு. “ஆமாம் அவை உதவியாக உள்ளன” என சொல்லாதீர்கள். நன்றிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவைகளிலிருந்து என்ன வெளிவருகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். 

Thursday, December 6, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 8

ஃப்ளாடி, ஸுவீடன்,
ஆகஸ்ட் 12, 1904.

அன்புள்ள கப்பஸ், 
நான் பேசும் விஷயங்கள் உங்களுக்கு எவ்வகையிலும் உதவி புரியாது என்றபோதும், உங்களுடன் இன்னும் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு உதவக் கூடிய சொற்களை கண்டெடுக்க என்னால் முடியவில்லை. உங்களுக்கு பல துயரங்கள் உள்ளன, உங்களை விலகி சென்றுவிட்ட  பெரும் துயரங்கள். சமீபத்தில் உங்களை கடந்து சென்ற மனத்துயரம் மிகுந்த கடினமாக இருந்ததாக கூறியிருந்தீர்கள். தயவு கூர்ந்து, உங்களிடமே கேட்டுப் பாருங்கள், இத்தகைய பெரும் சோகங்கள் கூட உங்களினூடே கடந்து போய் விட்டன அல்லவா? உங்களுக்குள்ளே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்; எங்கோ, உங்கள் இருப்பின் ஆழங்களில் சோகத்துடன் இருந்த சமயங்களில் முக்கியமான மாறுதல்களை நீங்கள் அடைந்திருக்கக்கூடும். சோகங்களிலே மிகவும் அபாயமானவை, பொதுவெளியில் நாம் சுமந்து செல்லும் துயரங்களே. புறத்தில் உள்ள கூச்சலில் மூழ்கடிப்பதற்காக நாம் கொண்டு அலையும் மனத் துயரங்கள், முட்டாள்தனமாகவும், மேம்போக்காகவும் சிகிழ்ச்சையளிக்கப் பட்ட நோயை போன்றவையாகும்; சிறிது காலத்திற்கு பின்வாங்கிக் கொண்டு பிறகு அதிக கொடூரத்துடன் கட்டவிழ்த்து வெளிவரும்; நமக்குளே சேகரம் ஆகி, நம் வாழ்க்கையாகி விடும் – நாம் வாழ இயலா வாழ்க்கை, நிராகரிக்கப் பட்ட, இழக்கப்பட்ட, மரணத்தை கொண்டு சேர்க்கும் வாழ்க்கை. நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க முடிந்தால், நம் முன்னெண்ணங்களின் வெளிக் கட்டுமானங்களைத் தாண்டி அறிய முடிந்தால், துயரங்களை, மகிழ்ச்சியான பொழுதுகளை விட அதிக நம்பிக்கையுடன் தாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் துயரத்தின் பொழுதுகளில் தான் நாமறியா ஒன்று நம்முள் நுழைகிறது; நமது உணர்ச்சிகள் , சங்கோஜத்துடன் மௌனமாகின்றன, நம்முள்ளே உள்ள அத்தனையும் பின்வாங்குகின்றன, அமைதி எழுகிறது, புதியதொரு அனுபவம், யாரும் அறிந்திராத அனுபவம், எல்லாவற்றிற்கும் நடுவில் ஒன்றுமே கூறாமல் நிற்கிறது.

Monday, November 19, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 7

ரோம்,
மே 14, 1904

அன்புள்ள திரு. கப்பஸ்,
கடைசியாக நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அதற்கு பதிலளிக்காததற்காக என் மீது வருத்தம் கொள்ளாதீர்கள். முதலில் வேலைப் பளு, பிறகு பல இடைஞல்கள், இறுதியாக தொடர்ந்து கொண்டேயிருக்கும் உடல் நலக்குறைவு எல்லாம் சேர்ந்து என்னை பதிலளிக்க விடவில்லை: ஏனென்றால் என் பதிலகள் அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியான நாட்களில் இருந்து உங்களை அடைய வேண்டும் என விரும்பினேன். இப்போது உடல் நிலை மறுபடியும் சீரடைந்தது போல உணருகிறேன் ( வசந்த காலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் சீதோஷண நிலைமாற்றங்களை இங்கும் தாங்கிக் கொள்ள கடினமாக உள்ளது). திரு. கப்பஸ் மறுபடியும் என் வாழ்த்துக்களை சொல்லி உங்களுடன் அதைப் பற்றியும், உங்களுடைய கடிதத்திற்கான பதிலையும் என்னால் இயன்ற வரை பேச முயற்சிக்கிறேன்.

நீங்கள் அனுப்பிய பாடலை பிரதி எடுத்துள்ளேன் ஏனென்றால் அது அற்புதமானதாகவும், எளிமையுடன் மனதிற்குள் நுழைய கூடியதுமாக இருந்தது. நீங்கள் எனக்கு வாசிக்க அனுப்பிய கவிதைகளில் அதுவே மிகச் சிறந்த கவிதையாகும். இப்போது நான் எடுத்த பிரதியை உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனென்றால் மற்றவருடைய கையெழுத்தில் தன்னுடைய படைப்பை வாசிப்பதால் கிடைக்கும் புதிய அனுபவங்கள் மிகவும் முக்கியமானது என நான் அறிவேன். இந்த கவிதையை இதற்கு முன் அறிந்திராதது போல வாசித்துப் பாருங்கள்; உங்கள் மனதின் ஆழத்தில் அக்கவிதை உங்களுக்கேயானது என உணர்வீர்கள்.

Friday, November 2, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 6

ரோம்,
டிசெம்பர் 23, 1903

என் அன்பிற்குரிய கப்பஸ்,
என்னிடமிருந்து வாழ்த்துச் செய்தி இல்லாமல் உங்களுடைய கிறுஸ்துமஸ் நாள் அமைவதில் எனக்கு விருப்பமில்லை. அதுவும் இந்த விடுமுறை தினங்களின் மத்தியில் தனிமையை கூடுதல் பாரத்துடன் நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில். ஆனால் அந்த தனிமை மிகுந்த விரிவை உடையது என்பதை நீங்கள் கண்டு கொண்டால் மகிழ்ச்சியடைவீர்கள். (நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது) இத்தனை விரிவை அடையாத தனிமை உண்டென்றால் அது என்ன; இங்கிருப்பது ஒரே ஒரு தனிமை தான், அது மிகவும் விசாலமானது, சுமப்பதற்கு மிகவும் சிரமானதும் கூட. ஏறத்தாழ அனைவருமே, தங்களுடைய வாழ்க்கையில் சில மணி நேரங்களாவது மனமுவந்து சக மனிதர்களுடன் கூடிப் பழகுவதற்கும் – அது எத்தனை அற்பமான, மதிப்பற்ற விஷயமாக இருந்தாலும் – அடுத்தவரிடம் வெளிப்படையாக சிறு வகையிலாவது ஒத்துப் போவதற்கும் விரும்புவான். ஆனால் இந்த சில மணி நேரங்கள் தான் தனிமை நம்முள்ளே பெரிதாக நிறையும் பொழுதுகளாக இருக்கலாம்; ஏனென்றால் தனிமையின் வளர்ச்சி, சிறுவர்களின் வளர்ச்சியைப் போலவும் அல்லது வசந்த காலத்தின் தொடக்கத்தைப் போலவும் மிகவும் துயரமானதாகும். ஆனால் அது உங்களை குழப்பிவிடக் கூடாது. இறுதியில், அவசியமானது என்பது இது தான்: ஏகாந்தம், மிகவும் விசாலமடைந்த ஏகாந்தம். உங்களுக்குளே பல மணி நேரங்கள் யாரையும் கண்டடையாமல் தனியாக நடத்தல் – அது தான் நீங்கள் அடைய வேண்டியது. குழந்தையாக இருந்த போது மூத்தவர்கள் உங்களைச் சுற்றி அவர்களுக்கே உரிய பெரியதும், முக்கியமானதுமாகிய விஷயங்களில் ஆழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கையில், அவர்கள் செய்யும் காரியங்கள் எதையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்திருப்பீர்கள். இன்று நீங்கள் அடைய வேண்டியது அந்த குழந்தையின் தனிமையையே.

Tuesday, October 23, 2012

விவாத சூழல்

நண்பர் ஒருவருடன் காலை நடையின் போது இலக்கியம் குறித்தும், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அந்த விவாதம் தீர்க்கமான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தினசரி வாழ்க்கையை குறித்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்தின் இடையே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தலைப்பு உள்ளே நுழைந்து விட்டது. முடிவில் அது சுவாரசியமான விவாதமாக அமைந்தது. அதன் தலைப்பு தோராயமாக இப்படி வைத்துக் கொள்ளலாம் – “மனிதனுக்கு கலை, இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வம் பிறப்பிலேயே எழுகிறதா அல்லது தொடர் பயிற்சியின் விளைவாக உருவாவதா?” எங்களுடைய நிலைப்பாடு அந்த கட்டுரையுடன் உடன்பட்டும், எதிர்த்தும் இருக்கவில்லை. இங்கு விவாதத்திற்கு உள்ளானது அக்கட்டுரையை குறித்த எங்களுடைய நுண்புரிதல்கள் மட்டுமே.

விவாதத்தின் முடிவு என்ன, அப்போது பகிரப்பட்ட கருத்துக்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படவில்லை. எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து அதைப் பற்றி – விவாத சூழலைப் பற்றி – யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்கள் புலப்பட்டன. அவைகளே இங்கு பகிரப்பட உள்ளன.

Sunday, October 21, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 5

ரோம்,
அக்டோபர் 29, 1903

உங்களுடைய கடிதம் ஆகஸ்ட் 29 அன்று ஃப்ளோரன்ஸ் நகரத்தில் என்னை வந்தடைந்தது; அதற்கு மிகவும் தாமதமாக – இரண்டு மாதங்கள் கழித்து – பதிலளிக்கிறேன். என்னுடைய மெத்தனத்தை மன்னிக்கவும். நான் பயணம் செல்லுகையில் கடிதம் எழுதுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் கடிதம் எழுதுவதற்கு மிக அத்தியாவசியமான உபகரணங்களுடன் சேர்த்து அமைதியும், ஏகாந்தமும், மிகவும் பரிச்சயமற்ற நேரமும் எனக்கு தேவைப்படுகிறது.

நாங்கள் ஆறு வாரங்களுக்கு முன், ஆட்களற்ற, வெக்கை மிகுந்த ரோம் நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த சூழ்நிலையில், தங்குவதற்கு ஏற்ற இடம் கிடைப்பதற்க்கு உண்டான பிரச்சனைகளால், எங்களை சூழ்ந்திருந்த அமைதியின்மை முடிவற்றது போல தோன்றியது. அதோடு, ரோம் நகரம் ( அதோடு பழக்கப்படுத்திக் கொள்ளாதவருக்கு) ஒருவரை ஆரம்ப நாட்களில் துயரத்தால் கட்டிப் போட்டுவிடுகிறது. அதற்கு காரணம் இந்நகரத்தின் ஜீவனற்ற அருங்காட்சியகத்தை ஒத்த சூழல்; கடந்த காலங்களின் செல்வ செழிப்புகளை வலிந்து முன்னே கொண்டு வந்து (கடந்த கால செழிப்புகளை நம்பி தற்காலத்தின் ஒரு சிறு பகுதி வாழ்ந்து வருகிறது), கல்விமான்களாலும், கலை ஆர்வலர்களாலும் மட்டுமீறிய அளவிற்கு அவற்றின் மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.  அவர்களின் நகலாக நடந்து கொள்ளும் இத்தாலியின் சராசரி சுற்றுலாப் பயணி பார்ப்பவை எல்லாம் மற்றொரு காலகட்டத்தின், நம்மைச் சாராத மற்றொரு வாழ்க்கை சூழலின் தற்செயலாக எஞ்சியுள்ள சிதைந்து, அழிந்து கொண்டிருக்கும் பொருட்களே;  இறுதியில், சில வாரங்கள் மன எதிர்ப்பு கழிந்த பின் ஒருவர் இந்நகரில் மிச்சமிருக்கும் சிறு குழப்பத்துடன் சமநிலையை அடைய முடியும். பிறகு தனக்குத் தானே ஒருவர் சொல்லிக் கொள்வது: “மற்ற இடங்களை விட இந்த இடம் கூடுதல் அழகுடையது அல்ல. தலைமுறைகளாக போற்றப்பட்டும், மிகச் சிறந்த பணியாளர்களின் கைகள் கொண்டு செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்படும் இப்பொருட்களில் மதிப்போ, அழகோ, உணர்வோ எதுவும் இல்லை, இல்லவே இல்லை”.

Friday, October 12, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 4

வார்ப்ஸ்விட், ப்ரீமென் நகரின் அருகில்,
ஜூலை 16, 1903

சுமார், பத்து நாட்களுக்கு முன் பாரீஸிலிருந்து, தளர்ச்சியும் உடல் நலக்குறைவுடனும், கிளம்பி இந்த அற்புதமான வட சமவெளிப் பகுதிக்கு வந்தேன். இந்த பகுதியின் விசாலமும், அமைதியும், வானமும் என்னை மறுபடியும் சுகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட மழை காலத்தின்  நடுவினில் வந்து சேர்ந்தேன்; அமைதியின்றி ஓலமிட்டுக் கொண்டிருந்த நிலவெளி இன்று தான் முதல் முறையாக அடங்கியது. பிரகாசமான இக்கணத்தில் என் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன், ஐயா.

என் அன்பிற்குரிய திரு. கப்பஸ்: உங்கள் கடிதமொன்று வெகு காலமாக பதிலளிக்கப்படாமல் என்னிடம் உள்ளது; நான் அதை மறந்து விட்டேன் என்பதனால் அல்ல. மாறாக பல கடிதங்களின் மத்தியில் அதைக் காணும் போதெல்லாம் மறுபடியும் வாசிக்க வைக்கும் கடிதம் அது. அக்கடிதத்தில் நீங்கள் எனக்கு மிக அருகில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்.  அது நீங்கள் மே மாதம் இரண்டாம் நாள் அனுப்பிய கடிதம்; நிச்சயமாக உங்களுக்கு அக்கடிதம் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இத்தருணத்தில், தொலைதூரத்தில் உள்ள இவ்விடத்தின் அமைதியில் அக்கடிதத்தை வாசிக்கையில், வாழ்க்கையை நோக்கிய உங்களுடைய இனிமையான பதட்டம் என் மனதை உருக்குகிறது – பாரீஸில் இருந்ததை விட மேலாகவே, ஏனென்றால் அங்கு அளவிற்கு அதிகமான கூச்சலால், சகலமும் எதிரொலித்து தேய்ந்து மாறிப் போய்விடுகிறது. இங்கே, கடல் காற்று அசைந்து செல்லும் மிகப்பெரிய நிலவெளியால் சூழப்பட்ட இடத்தில், எனக்கு தோன்றுவது என்னவென்றால்: ஆழங்களில் தமக்கென ஒரு வாழ்க்கையை கொண்டிருக்கும் உங்களுடைய கேள்விகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கக் கூடியவர் எங்கேயும் இல்லை. நினைத்ததை தெளிவாக உரைக்கும் திறமை கொண்டவர் கூட உங்களுக்கு உதவி செய்ய இயலாது, ஏனென்றால் அவ்வார்த்தைகள் சுட்டுவது சொல்லிவிட முடியாத,  நுண்மையான ஒன்றை பற்றியே. இருந்தாலும் கூட, இந்த தருணத்தில் என் கண்களின் முன்னால் உள்ள காட்சியைப் போன்ற விஷயங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்தால், உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே இருந்து விடாது என நான் எண்ணுகிறேன். இயற்கையின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால், அதில் யாரும் கவனிக்காமல் விடும் சிறு விஷயங்கள் திடீரென்று அளவிட முடியாத பிரம்மாண்டத்தை அடைந்து விடும்; எளியவைகளின் மீது நீங்கள் அன்பு கொள்வீர்கள் என்றால்; அந்த அன்பை சேவகம் செய்பவரைப் போல, ஒரு ஏழையின் நம்பிக்கையை அடைவதற்கு என்பதைப் போல; மிகவும் அடக்கத்துடன் பிரயோகிப்பீர்கள் என்றால்; கூடுதல் ஒத்திசைவுடனும், சமரசத்தோடும் சகல காரியங்களும் உங்களுக்கு எளிதாகிவிடும்; உங்களுடைய விழிப்பு நிலையில் அப்படி தோன்றாவிட்டாலும், ஆழ் மனதின் அறிவில் தெரிந்துவிடும். 

Friday, October 5, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 3

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 23, 1903

ஈஸ்டர் திருநாளுக்காக அனுப்பிய கடிதம் மூலம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தீர்கள். ஏனென்றால், அக்கடிதம் உங்களை பற்றிய நல்ல செய்திகளை கூறியது மற்றும் ஜேகப்ஸனின் உன்னதமான கலையை பற்றி நீங்கள் கூறிய விதம், உங்கள் வாழ்க்கையையும் அதன் கேள்விகளையும் இந்த செல்வத்தை நோக்கி நான் தவறாக வழிகாட்டவில்லை என உணர்த்தியது.

இனி ‘நீல்ஸ் லைன்’நாவல் அலங்காரமும், ஆழமும் நிறைந்த ஒரு புத்தகத்தை உங்களுக்கு திறந்து கொடுக்கும். ஒருவர் அதை மறுபடியும் வாசிக்கையில், மேலும் அதில் - வாழ்க்கையின் நுட்பமான வாசனைகளில் தொடங்கி அதன் மிகப் பெரிய கனிகள் வரை - அனைத்தும் அடங்கியிருப்பது போல தோன்றும். அந்த புத்தகத்தில் புரிந்து கொள்ள முடியாதது என்றோ, வாழப்படாதது என்றோ, நினைவுகளின் ஊசலாட்டத்தின் எதிரொலியில் அறிந்திராதது என்றோ எதுவும் இல்லை. அதில் எந்த அனுபவமும் முக்கியமற்றது அல்ல; விதியின் படி நடப்பது போல சிறு சம்பவங்களும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும், விதியே கூட ஒரு அகண்ட விந்தையான துகில் – அதன் ஒவ்வொரு இழையும் முடிவிலா மென்மையை கொண்ட கைகளால் எடுக்கப்பட்டு, இன்னொரு இழையின் அருகாமையில், இன்னும் நூறு இழைகளால் தாங்கப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது – போலிருக்கும். முதல் முறை வாசிக்கையில் நீங்கள் மிகுந்த சந்தோஷத்தை உணர்வீர்கள் மேலும் அதன் எண்ணிலடங்கா ஆச்சரியங்களை கனவிலிருப்பது போல் கடந்து செல்வீர்கள். பின்னர் இந்த புத்தகங்களை மறுபடியும் பலமுறை இதே திகைப்புடன் வாசிக்கையில், அவை தம்முடைய அற்புதமான ஆற்றல்களையும், நம்மை கவர்ந்திழுக்கும் தன்மையையும், முதல் முறை  வாசிப்பதை போலவே கொஞ்சமும் இழந்துவிடுவதில்லை என்றே கூறுவேன்.

Sunday, September 30, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 2

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 5, 1903

பிப்ரவரி 24 அன்று எழுதி அனுப்பிய உங்களுடைய கடிதத்திற்கு தாமதமாக இன்று பதிலளிப்பதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இத்தனை காலமும் உடல் நலமற்று இருந்தேன், நோய்வாய்ப்பட்டு என்று சொல்ல இயலாது, ஆனால் இன்ஃப்ளுயென்ஸா போன்ற உடல் தளர்ச்சியால் எந்த காரியத்தையும் செய்ய முடியாமல் இருந்தேன். என் உடல்நிலை இறுதி வரை முன்னேற்றம் கொள்ளாததால், தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்தேன், அதன் நலத்தன்மை மீண்டுமொருமுறை எனக்கு உதவியது. ஆனால் நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை, எழுதுவது கடினமாக உள்ளது. ஆதலால் நான் அனுப்ப ஆசைப்பட்ட உங்களுக்கான கடிதத்திற்கு பதிலாக இந்த ஒருசில வரிகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நிச்சயமாக, உங்களுடைய ஒவ்வொரு கடிதமும் எனக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதில் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்டு போயிருக்கலாம், அதனாலேயே நீங்கள் பல நேரங்களில் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லலாம்; ஏனென்றால் முடிவில் முக்கியமான, ஆழ்ந்த விஷயங்களில் நாம் சொல்ல இயலா தனிமையில் தான் உள்ளோம்; ஒரு மனிதன் மற்றொனுவனுக்கு வெற்றிகரமாக உபதேசமோ அல்லது உதவியோ செய்து முடிக்க பல சம்பவங்கள் ஒன்று பட்டு சரியாக நடந்தேற வேண்டியுள்ளது.

Tuesday, September 18, 2012

புத்தகத்தை வாசிப்பது எப்படி? – விர்ஜினியா வுல்ஃப்

முதலில் இந்த தலைப்பின் இறுதியில் உள்ள வினவும் தன்மையை குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கான பதிலை நான் அடைந்தாலும், அந்த பதில் எனக்கு மட்டுமே பொருந்தும், உங்களுக்கு அல்ல. மற்றெவருடைய அறிவுரையையும் ஏற்காமல், தன்னுடைய உள்ளுணர்வை தொடர்ந்து சென்று, தன்னுடைய தர்க்கத்தை உபயோகித்து, தனக்கான முடிவுகளை அடைய வேண்டுமென்பதே வாசிப்பதற்கான அறிவுரையாக ஒருவர் மற்றொருவருக்கு தர முடியும். நமக்குள் இந்த கருத்து சம்மதமென்றால் நான் என்னுடைய கருத்துகளையும், பார்வைகளையும் உங்கள் முன் வைப்பேன், ஏனென்றால் அவை, ஒரு வாசகன் கொள்ள வேண்டிய முக்கிய குணமான, உங்கள் வாசிப்பு சுதந்திரத்தை தடுப்பதற்கு அனுமதிக்க மாட்டீர்கள். புத்தகங்களைப் பற்றி அப்படி சட்டங்கள் வகுத்திட முடியுமா என்ன?

வாட்டர்லூவின் யுத்தம் நிச்சயமாக குறிப்பிட்ட ஒரு நாளில் தான் போரிடப்பட்டது: ஆனால் ஹாம்லெட் லியரை விட சிறப்பான நாடகமா? யாராலும் முடிவாக சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் அதற்கான முடிவை அவர்களே அடைய வேண்டும்.

Sunday, September 9, 2012

திரை கடல் திரவியம் - சிறுகதை


மதிய உணவு இடைவேளையில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த நண்பனுடன் திரைப்பட பாடல்களை போலவே ரீமிக்ஸ் பாடல்களை உருவாக்குவதற்கு இசை ஞானம் தேவையில்லை என உணர்ச்சிகரமாக விவாதித்ததை இப்போது நினைக்கையில் கூச்சமாக இருந்தது. மதியம் மூன்று மணியளவில் கம்பெனியில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு தற்போதைக்கு நாங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்த எல்லா மின்னணு சாதனங்களையும் நிறுத்தப் போவதாக அறிவித்தார்கள். சுருக்கத்தில், நாளை காலை வேலைக்கு வேண்டுமென்றால் வரலாம் ஆனால் செய்வதற்கு ஓன்றும் இல்லை. அடுத்தது அதிகாரப்பூர்வமாக வேலைக்கு வரவே வேண்டாம் என்று எப்போது அறிவிப்பார்கள் எனத் தெரியவில்லை.

     மொத்தமாக ஆயிரம் சொச்சம் பணியாளர்களும் மாநாட்டுக் கூடத்தில் திரண்டிருக்க கோட், சூட், டை, பளபளக்கும் ஷூ அணிந்த இருவர் மேடை மீது நின்று கொண்டு அதை அறிவித்தார்கள். கீழே நின்றவர்களின் முகங்களை பார்க்க சகிக்கவில்லை. சிலர் தரையை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், இரு ஆள் உயரமும் பத்தடி அகலமும் உடைய ஜன்னல் கண்ணாடி வழியே சிலர் தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறு சிலரோ கூட்டத்தின் நடுவே யாருக்கெல்லாமோ அவசரமாக இங்கு நடந்துகொண்டிருப்பதை செல்பேசியில் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என் முகத்தை கண்ணாடியில் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாமோ என்றும் தோன்றியது.

Friday, August 10, 2012

கவிதை விவாதத்தின் அவசியம்

நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால் தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.

Saturday, August 4, 2012

இசைச் செவி


சில வாரங்களாக வலிந்து வேலைக்கு காரில் போய் வருகையிலும், வீட்டில் கணினியில் இணையத்தில் மேய்கையிலும் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மரபிசையில் அதிக நாட்டமோ பழக்கமோ இல்லாதிருந்ததால், இப்போது மனதை பழக்கிக் கொள்ள இசை கேட்கும் செயலை ‘வலிந்து’ செய்ய வேண்டியுள்ளது. எனக்கு செவியுணர்வு ஒப்பிடுகையில் குறைவு என யூகித்து வைத்திருக்கிறேன். இந்த நாட்களில், மரபிசையை கேட்டு அவதானித்ததில் அந்த யூகம் இன்னும் நிச்சயமாக மனதில் பதிந்து விட்டது.

என்னுடன் முதுகலையில் ஒரே அறையில் வசித்த நண்பன் தேர்ந்த கர்நாடக வயலின் இசையாளன். அவனிடம் நான் ஒரு பாட்டின் இரு வரிகளை கேட்டவுடனேயே ராகங்களை கண்டு கொள்ளும் சிலருடைய திறமையை வியந்து கொண்டிருக்கையில், அவன், அது கடினமான விஷயமேயில்லை என்றும், இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் அத்திறமை எளிதில் சாத்தியப்படும் என்றும் பதிலளித்தான். அந்த உரையாடலுக்கு ஒரு வாரம் முன்பே மரபிசையை கேட்க ஆரம்பித்துவிட்டதால், மனதில் புது உற்சாகத்துடன் இசை கேட்டலைத் தொடர்ந்தேன். ஆனால் என் நம்பிக்கைப்படி அல்லது நண்பனின் நிபுண கருத்துப்படியோ இசைக் கட்டுமானத்தின் இணைப்புகளையும், அதன் வடிவங்களையும் மனதால் பகுத்தறிய இயலவில்லை.

Thursday, July 26, 2012

பெய்யெனப் பெய்யும் இரவு


பல்லாயிரம் இரவுகள் தாண்டி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு சில நேரங்களில் ஒரு மர்ம பிரபஞ்ச செயல் போல மனதிற்குள் தோன்றுகிறது. அத்தனை இரவுகளையும் ஒன்று சேர்த்து அடுக்கினால் அவை தம்முள் கலந்து ஒரே இரவாக, இனிவரும் எல்லா இரவுகளின் ஆரம்பக் கண்ணியாக மாறித் தெரிகிறது. பகல்கள் எப்போதும் அத்தன்மையை கொண்டிருப்பதில்லை. அதிகபட்சம் அவை, பிரதி எடுக்கப்பட்ட ஆயிரம் பகல்களாக வெளிறி நிற்குமேயன்றி அவை ஒன்று கூடுவதேயில்லை.

இரவு ஆரம்பிப்பது இருட்டு கூடும் பொழுது என தோன்றவில்லை. யதார்த்தத்தில் ஒவ்வொரு இரவும் ஏதொவொரு எதிர்பாரா புள்ளியில் ஆரம்பமாகிறது. பெரும்பாலான இரவுகள் தொடங்கும் முன் உறங்கி விடுகிறோம். மனதின் அடி ஆழத்தில் உள்ள மனதொன்று, அவ்வுறக்கத்திலும் அப்புள்ளியை குறித்து வைத்துக் கொண்டு, விழித்திருக்கும் இரவுகளில் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.

Tuesday, July 10, 2012

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …


நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் - அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது.

நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் போலவா? சராசரி பயணியாகவா? அல்லது இவையெல்லாமில்லாத வேறொரு ஆளுமையாகவா?

ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் முதல் நாள் கம்பராமாயணம் கலந்துரையாடலுக்கு அவர் வீட்டினுள் நுழையக் கண்ட பொழுது, மிக தயக்கத்துடன் புதியவர்களை கண்டு வணக்கம் சொல்லும் ஒரு எளிய மனிதராகத் தான் தோன்றினார். தன்னிடம் கேட்கப் படாத கேள்விகளுக்கு வலிய சென்று அவர் பதிலுரைத்து நான் காணவேயில்லை. சின்ன தகவல் முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறு தயக்கமின்றி அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வெளியிடங்களில் தான் காண்பதை உள்வாங்கிக் கொண்டே, சில நேரங்களில் பாக்கெட்டில் வைத்திருந்த கனக்கச்சிதமான ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.