பல்லாயிரம் இரவுகள் தாண்டி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு சில நேரங்களில் ஒரு மர்ம பிரபஞ்ச செயல் போல மனதிற்குள் தோன்றுகிறது. அத்தனை இரவுகளையும் ஒன்று சேர்த்து அடுக்கினால் அவை தம்முள் கலந்து ஒரே இரவாக, இனிவரும் எல்லா இரவுகளின் ஆரம்பக் கண்ணியாக மாறித் தெரிகிறது. பகல்கள் எப்போதும் அத்தன்மையை கொண்டிருப்பதில்லை. அதிகபட்சம் அவை, பிரதி எடுக்கப்பட்ட ஆயிரம் பகல்களாக வெளிறி நிற்குமேயன்றி அவை ஒன்று கூடுவதேயில்லை.
இரவு ஆரம்பிப்பது இருட்டு கூடும் பொழுது என தோன்றவில்லை. யதார்த்தத்தில் ஒவ்வொரு இரவும் ஏதொவொரு எதிர்பாரா புள்ளியில் ஆரம்பமாகிறது. பெரும்பாலான இரவுகள் தொடங்கும் முன் உறங்கி விடுகிறோம். மனதின் அடி ஆழத்தில் உள்ள மனதொன்று, அவ்வுறக்கத்திலும் அப்புள்ளியை குறித்து வைத்துக் கொண்டு, விழித்திருக்கும் இரவுகளில் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.