Tuesday, August 18, 2009

எழுத்தாளனை தேடி......

எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பலவிதமான புத்தகங்களை தேடிப் படிக்கின்றனர். ஒரு புத்தகம் வாசகர்களிடம் அறிமுகமாகும் சூழல் பெரும்பாலும் சிறு வேற்றுமைகளை கடந்து அடிப்படையில் பத்திரிகை விமர்சனங்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்த எழுத்தாளர்களின் சிபாரிசு, புத்தகக் கண்காட்சி, இலக்கிய கூட்டம், இணையதளம் போன்ற காரணிகளாலேயே ஏற்படுகின்றது.
எந்த ஒரு நல்ல படைப்பும் பொதுவாகவே இவ்வெளிச்சங்களால் அடையாளம் காணப்படுகிறது.
நல்லதொரு முதற்படைப்பு உருவாகி, அதற்கு மிக சாதகமான விமர்சனமும் ஒரு பிரபல பத்திரிக்கையால் கொடுக்கப்பட்டு, ஆனால் எவராலும் படிக்கப்படாமல், காலத்தின் சுழற்சியில் முப்பது வருடங்களுக்கும் மேலாக தொலைக்கப்பட்டு, பிறகு அதை ஒரு வாசகன் கண்டெடுத்து, அதன் எழுத்தாளனை தேடிச் செல்கின்ற பயணத்தின் பதிவே 'தி ஸ்டோன் ரீடர் (The Stone Reader)' என்கின்ற ஆவணப் படம்.
எழுபதுகளின் தொடக்கத்தில் 'தி ஸ்டோன்ஸ் ஆப்ஃ ஸம்மர் The Stones of Summer' என்ற நாவல் 'டாவ் மோஸ்மென் Dow Mossman' என்பவரால் எழுதப்பட்டு அமெரிக்காவில் வெளியானது. அக்காலத்தின் பிரபல நாளேடான 'தி நியூயார்க் டைம்ஸ்' அந்நாவலுக்கு மிக சாதகமான விமர்சனம் கொடுத்து, பரிந்துரை செய்து செய்தி வெளியிட்டது.

Friday, August 14, 2009

எழுதுவதற்கான காரணம்...

எழுத வேண்டும் என யோசித்து யோசித்து பல வருடங்கள் கடந்து விட்டது. இறுதியில், "ஏன் எழுதவில்லை?", என்ற தலைப்பு மட்டும் தான் என்னால் எழுத முடியும் என்றாகிவிட்டது.

ஒரு பத்தி, கட்டுரை அல்லது கதையை படிக்கும் சமயத்தில், நானும் இது போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலெழும், பிறகு அடுத்த வாசிப்பு வரை அது காணாமல் போய்விடும். பயணங்களின் போது, ஒரு திரைபடத்தை அல்லது ஆவண படத்தை பார்க்கும் போது, தனிமையில் பொழுதை கழிக்கும் போது, மன நெருக்கடியில் தவிக்கும் போது என்று பல பல நேரங்களில், மனதில், எழுதுவதற்கான 'கரு' என்று ஒன்று உருவாகி, சில கணங்கள் தங்கிவிட்டு செல்லும். அந்த நேரத்தில் மறுபடியும் 'எழுத வேண்டும்' என்ற எண்ணம் மேலெழுந்து, கற்பனையில் அந்த கருவின் தனித்துவத்தை பொறுத்து, ஒரு நிமிடமோ அரை நிமிடமோ அதை நான் எழுதுவதை போன்ற நிகழ்வு வேறொரு காலவெளியில் நடந்தேறும். அதை தொடர்ந்து நிழலை போல, "இதில் எழுத என்ன இருக்கிறது? இதை விட நிறைய தோன்றினால் எழுதலாம்!!" என்ற தணிக்கை நினைப்பு முழுவதுமாக மனதில் படரும். இறுதியில் நிழலையே
நம்பினேன்.

எதை பற்றி எழுதுவது? சின்ன விஷயமா? பெரிய விஷயமா? எப்படி எழுதுவது? நடந்ததை அப்படியே எழுதுவதா அல்லது நடந்ததை என் விருப்பு வெறுப்பு வழியாக எழுதுவதா? இல்லை அவற்றை ஒரு குறியீடாக வைத்து வேறொரு விஷயத்தை சொல்லவா? அல்லது.... இப்படி எல்லா கேள்விகளுக்கும், 'தள்ளி போடு', என்ற ஒற்றை பதிலை கொடுத்து விலகினேன்.
மனதின் கேள்விகள் உயிரியலில் படித்த 'அமீபா' போன்றது. அறுத்து இரண்டாக போட்டால் சில நாட்கள் கழித்து இரு வேறு வினாக்களாக எழுந்து நின்றன. புரியாமல் பல முறை அறுத்ததால், என்னை சுற்றி பல கேள்விகள்.