Sunday, September 30, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 2

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 5, 1903

பிப்ரவரி 24 அன்று எழுதி அனுப்பிய உங்களுடைய கடிதத்திற்கு தாமதமாக இன்று பதிலளிப்பதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இத்தனை காலமும் உடல் நலமற்று இருந்தேன், நோய்வாய்ப்பட்டு என்று சொல்ல இயலாது, ஆனால் இன்ஃப்ளுயென்ஸா போன்ற உடல் தளர்ச்சியால் எந்த காரியத்தையும் செய்ய முடியாமல் இருந்தேன். என் உடல்நிலை இறுதி வரை முன்னேற்றம் கொள்ளாததால், தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்தேன், அதன் நலத்தன்மை மீண்டுமொருமுறை எனக்கு உதவியது. ஆனால் நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை, எழுதுவது கடினமாக உள்ளது. ஆதலால் நான் அனுப்ப ஆசைப்பட்ட உங்களுக்கான கடிதத்திற்கு பதிலாக இந்த ஒருசில வரிகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நிச்சயமாக, உங்களுடைய ஒவ்வொரு கடிதமும் எனக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதில் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்டு போயிருக்கலாம், அதனாலேயே நீங்கள் பல நேரங்களில் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லலாம்; ஏனென்றால் முடிவில் முக்கியமான, ஆழ்ந்த விஷயங்களில் நாம் சொல்ல இயலா தனிமையில் தான் உள்ளோம்; ஒரு மனிதன் மற்றொனுவனுக்கு வெற்றிகரமாக உபதேசமோ அல்லது உதவியோ செய்து முடிக்க பல சம்பவங்கள் ஒன்று பட்டு சரியாக நடந்தேற வேண்டியுள்ளது.


இன்று உங்களுக்கு இன்னும் இரண்டு விஷயங்களை சொல்ல நினைக்கிறேன்.
முரண்நகை: உங்களை கட்டுப்படுத்த அதை அனுமதிக்காதீர்கள், முக்கியமாக படைப்பூக்கமற்ற காலங்களில். உங்கள் படைப்பாற்றல் உச்சத்தில் இருக்கும் பொழுது அதை உபயோகப்படுத்த முயலுங்கள், வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கு கிடைத்த மேலுமொரு வழியாக. தனித்து நேர்மையாக உபயோகித்தால், அதுவும் மிகவும் மேன்மையானது தான், அதற்காக குற்றமுணர்ச்சி கொள்ள தேவையில்லை. ஆனால் அதன்பால் மிகவும் பரிச்சியத்தையும், கட்டுப்பாடின்மையையும் நீங்கள் உணர ஆரம்பித்தால், அந்த பரிச்சயத்தை கண்டு அச்சமடைந்தால், முன்நிற்கையில் அவை சிறுமைப்பட்டு உதவியற்று போகும், இன்னும் சிறந்த, கருத்தாழம் மிக்க பொருட்கள் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். காரண காரியங்களின் ஆழங்களை தேடுங்கள்: அங்கே முரண்நகை இறங்குவதேயில்லை – மகத்துவத்தின் விளிம்பில் வருகையில் இங்ஙனம் உலகை புரிந்து கொள்வது உங்கள் இருப்பின் தேவையால் உருவானதா என கண்டு பிடியுங்கள். மகத்தான விஷயங்களுடைய பாதிப்பின் முன்னால் அது உங்களிலிருந்து உதிர்ந்து விடும் (தற்செயலானது என்றால்) இல்லையேல் (உங்களுடைய ஒரு பகுதி என்றால்) அது இன்னும் வலுவோடு வளர்ந்து, உங்கள் கலையை உருவக்குவதற்கான மற்றுமொரு சக்தி வாய்ந்த கருவியாக மாறிவிடும்.

இரண்டாவதாக உங்களிடம் நான் இன்று சொல்ல வருவது இது தான்: இருக்கும் அநேக புத்தகங்களில், தவிர்க்க முடியாதவை என நான் கண்டுகொண்டவை மிக சிலதே. மற்றும் அவைகளுள் இரண்டு புத்தகங்கள் நான் எங்கிருந்தாலும் எப்போதும் என்னோடு இருக்கும். இங்கே என்னருகிலேயே உள்ளன: பைபிள் மற்றும் சிறந்த டானிஷ் கவிஞராகிய ஜென்ஸ் பீட்டர் ஜேகப்ஸனின் புத்தகங்கள். உங்களுக்கு அவருடைய படைப்புக்களை பற்றி தெரியுமா? அவை எளிதில் கிடைக்கக் கூடும் ஏனென்றால் ரிக்ளேம் யூனிவெர்ஸல் நூலகத்தால் சிறந்த மொழிபெயர்ப்புடன் அவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஆறு சிறுகதைகள் கொண்ட சிறு தொகுப்பையும், அவருடைய நாவல்  ‘நீல்ஸ் லைன்’வாங்கிவிட்டு, முதல் சிறுகதையான ‘மோஜென்ஸ்’வாசிக்க ஆரம்பியுங்கள். ஒரு முழு உலகம், அதன் சந்தோஷங்கள், நிறைவு, கற்பனைக்கு எட்டாத விசாலம் ஆகியவற்றால் சூழ்ந்து கொள்ளப்படுவீர்கள். அந்த புத்தகங்களுக்கு உள்ளே சிறிது காலம் வாழுங்கள், அவைகளிலிருந்து வாசிக்க தகுந்தது எவை என கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக அவைகளை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை எவ்வழி சென்றாலும் அந்த நேசம் அயிரம் மடங்காக உங்களுக்கு திரும்பக் கிடைக்கும் – உங்களுடைய வாழ்க்கையை நெய்யும் மிக முக்கியமான இழைகளாகிய அனுபவங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும், மகிழ்ச்சிகளுக்கும் மத்தியில் அவை இன்னொரு இழையாக கூடிவிடும்.

படைப்பின் சாரத்தையும், அதன் ஆழங்களையும் மற்றும் நித்தியத்தன்மையையும் எனக்கு அளித்தவர்கள் யார் என சொல்ல வேண்டி வந்தால் நான் உரைப்பது இரு பெயர்களை மட்டுமே: ஜேகப்ஸன் மற்றும் அகஸ்ட் ரோடின், வாழும் கலைஞர்களுள் நிகரில்லா சிற்பி.
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

No comments: