Friday, August 10, 2012

கவிதை விவாதத்தின் அவசியம்

நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால் தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.

Saturday, August 4, 2012

இசைச் செவி


சில வாரங்களாக வலிந்து வேலைக்கு காரில் போய் வருகையிலும், வீட்டில் கணினியில் இணையத்தில் மேய்கையிலும் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மரபிசையில் அதிக நாட்டமோ பழக்கமோ இல்லாதிருந்ததால், இப்போது மனதை பழக்கிக் கொள்ள இசை கேட்கும் செயலை ‘வலிந்து’ செய்ய வேண்டியுள்ளது. எனக்கு செவியுணர்வு ஒப்பிடுகையில் குறைவு என யூகித்து வைத்திருக்கிறேன். இந்த நாட்களில், மரபிசையை கேட்டு அவதானித்ததில் அந்த யூகம் இன்னும் நிச்சயமாக மனதில் பதிந்து விட்டது.

என்னுடன் முதுகலையில் ஒரே அறையில் வசித்த நண்பன் தேர்ந்த கர்நாடக வயலின் இசையாளன். அவனிடம் நான் ஒரு பாட்டின் இரு வரிகளை கேட்டவுடனேயே ராகங்களை கண்டு கொள்ளும் சிலருடைய திறமையை வியந்து கொண்டிருக்கையில், அவன், அது கடினமான விஷயமேயில்லை என்றும், இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் அத்திறமை எளிதில் சாத்தியப்படும் என்றும் பதிலளித்தான். அந்த உரையாடலுக்கு ஒரு வாரம் முன்பே மரபிசையை கேட்க ஆரம்பித்துவிட்டதால், மனதில் புது உற்சாகத்துடன் இசை கேட்டலைத் தொடர்ந்தேன். ஆனால் என் நம்பிக்கைப்படி அல்லது நண்பனின் நிபுண கருத்துப்படியோ இசைக் கட்டுமானத்தின் இணைப்புகளையும், அதன் வடிவங்களையும் மனதால் பகுத்தறிய இயலவில்லை.

Thursday, July 26, 2012

பெய்யெனப் பெய்யும் இரவு


பல்லாயிரம் இரவுகள் தாண்டி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு சில நேரங்களில் ஒரு மர்ம பிரபஞ்ச செயல் போல மனதிற்குள் தோன்றுகிறது. அத்தனை இரவுகளையும் ஒன்று சேர்த்து அடுக்கினால் அவை தம்முள் கலந்து ஒரே இரவாக, இனிவரும் எல்லா இரவுகளின் ஆரம்பக் கண்ணியாக மாறித் தெரிகிறது. பகல்கள் எப்போதும் அத்தன்மையை கொண்டிருப்பதில்லை. அதிகபட்சம் அவை, பிரதி எடுக்கப்பட்ட ஆயிரம் பகல்களாக வெளிறி நிற்குமேயன்றி அவை ஒன்று கூடுவதேயில்லை.

இரவு ஆரம்பிப்பது இருட்டு கூடும் பொழுது என தோன்றவில்லை. யதார்த்தத்தில் ஒவ்வொரு இரவும் ஏதொவொரு எதிர்பாரா புள்ளியில் ஆரம்பமாகிறது. பெரும்பாலான இரவுகள் தொடங்கும் முன் உறங்கி விடுகிறோம். மனதின் அடி ஆழத்தில் உள்ள மனதொன்று, அவ்வுறக்கத்திலும் அப்புள்ளியை குறித்து வைத்துக் கொண்டு, விழித்திருக்கும் இரவுகளில் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.

Tuesday, July 10, 2012

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …


நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் - அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது.

நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் போலவா? சராசரி பயணியாகவா? அல்லது இவையெல்லாமில்லாத வேறொரு ஆளுமையாகவா?

ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் முதல் நாள் கம்பராமாயணம் கலந்துரையாடலுக்கு அவர் வீட்டினுள் நுழையக் கண்ட பொழுது, மிக தயக்கத்துடன் புதியவர்களை கண்டு வணக்கம் சொல்லும் ஒரு எளிய மனிதராகத் தான் தோன்றினார். தன்னிடம் கேட்கப் படாத கேள்விகளுக்கு வலிய சென்று அவர் பதிலுரைத்து நான் காணவேயில்லை. சின்ன தகவல் முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறு தயக்கமின்றி அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வெளியிடங்களில் தான் காண்பதை உள்வாங்கிக் கொண்டே, சில நேரங்களில் பாக்கெட்டில் வைத்திருந்த கனக்கச்சிதமான ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

Sunday, November 21, 2010

ஜெயமோகனின் லங்காதகனம்

எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல் தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் "கடமைக்காக" நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்க்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம். எந்த ஒரு துறையிலும் மறுக்கமுடியாத ஆளுமையை அடைந்தவர் - பரவலாக அறியப்பட்டவர் என்றிருக்க வேண்டியதில்லை - எல்லோரும் தான் செய்யும் செயலில் ஒவ்வொரு முறையும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முனைபவர்களாக இருப்பதை காணலாம். திரும்பத் திரும்ப செய்ய வேண்டிவரும் செயலாக இருப்பினும் அதில் மேற்கொண்டு மேன்மையை அடைய முயற்ச்சிதுக் கொண்டே இருப்பதையும், அதன் வழியே தன்னையே சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதையும் சிறிது நேரம் நாம் அவதானித்தாலேயே உணரமுடியும்.

நாம் ஒவ்வொருவரும் அப்படி ஒரு நிலையை ஒரு சில கணங்களாவது அனுபவித்திருப்போம். ஏதோ ஒரு காரியத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி புத்தி, மனம் எல்லாவற்றையும் கொண்டு செய்து கொண்டு நிமிர்ந்து உணரும் பொழுது மிகுந்த நேரம் கடந்துவிட்டதைப் போலவோ அல்லது நேரம் ஸ்தம்பித்து நின்றதைப் போலவோ உணர்ந்திருப்போம். அத்தருணத்தில் மனம் சதா அதன் முன் விழுந்து கிடக்கும் 'காலம்' என்ற திரையை விலக்கி பார்த்துவிட்டு மறுபடியும் அதன் பின்னால் வந்து அடங்கியபின் மிச்சமிருக்கும் அக்கணநேர விடுதலையின் ஞாபகமே அது. காலத்தை உத்றி சஞ்சரிக்கும் அத்தருணங்களில் மனதின் எல்லைகளை அப்பாற்பட்ட சில விஷயங்கள் மனதால் அறியப்படுவதுண்டு. இக்கூற்று வெறும் தத்துவ தளத்தில் சொல்லப்படுபவை என்றில்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுகிறது.

Wednesday, October 20, 2010

ஒற்றை செறுப்பு

திசைகள் சங்கமிக்கும்
இடத்தில் கிடந்தது
தனிமையில் குழந்தையின்
ஒற்றை செறுப்பு

கால்களை தொலைத்து
துணையை பிரிந்து
யாரோ வரும் வழி நோக்கி
சுணங்கியபடியே

மலரா பாதங்களின் வெம்மை
ஒன்றையே அறிந்தவனுக்கு
இனி
காலி வீட்டின் முன் நாளிதழ்
புல் மண்டிய கல்லரையின் பெயர் தூண்
என்ற
சொந்தங்களின் வழியே அறிவான்
தன் மறு பிரதிபலிப்பை

தினசரி கடந்து போகிறேன்
நம்பிக்கையுடன்
காணாமல் போய் விடுவான் என
நேற்று இன்று நாளை ...

Tuesday, October 5, 2010

மரணமெனும் சிறுவன்





ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வந்த தீபாவளிமுந்திய நாள் ஆரம்பித்துஅடுத்த நாள் இரவு மிக ஆரவாரமாக போய்க் கொண்டிருந்ததுஎனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார்மத்தாப்புபுஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம்பொன்னை செலவழிப்பது போல பட்டாசு கொளுத்துவேன்சில நாட்கள் கழித்து வரும் திருக்கார்த்திகைக்கும் இதில் மிஞ்சியதை வைத்து தான் சரி கட்டவேண்டும்

'ப்ளாக் வீடுகளின் சிறுவர்கள் விடும் ராக்கெட் ரகங்கள்  'பிப்ளாக்கில் இருந்த எனக்கு வாங்கித் தரப்படவில்லைஇன்னும் ஒரு பாக்கெட் ஆட்டம் பாம்ப்ஒரு பாக்கெட் சீனி வெடி, 2 பாக்கெட் லட்சுமி வெடி,, 4 டப்பா மத்தாப்புஒவ்வொரு பாக்கெட் புஸ்வாணமும்சக்கரமும் மீதமிருந்தது (சீனி வெடி தவிர மற்றவைகளில் பாதி கார்த்திகைக்கு வைப்பு நிதியாக்க வேண்டியிருந்தது). 

மாலை தூர்தர்ஷன் தமிழ் சிறப்பு படம்தெவிட்டும் இனிப்புகளுடன் முடித்துவிட்டு கடைசி ரவுண்ட் வெடிவைப்புக்கு பால்கனியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்பத்து அடி இடைவெளி விட்டு குவாட்டர்ஸ் முற்றத்தில் அரை ட்ரவுசர் போட்ட சிறுவன் நின்று கொண்டிருந்தான்புது உடுப்பு என சொல்வதற்கில்லைகிழிசல் இல்லைடம்டமால் என்று சத்தமும்பல வண்ணங்களில் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்கும் வாணவேடிக்கைகளுக்கு நடுவே அவன் அசைவே இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தான்எதற்காக வந்திருக்கிறான் என தெரியும்சீனி வெடி பாக்கெட்பால்கனியிலிருந்து குதித்து வெளியேறினால் அவனை கடந்து தான் அடுத்த ப்ளாக் நண்பர்களை அடைய முடியும்பார்வையை தவிர்த்து பட்டசுகளை கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தேன்போய் தொலைவான் என நினைத்தேன்.

Monday, September 20, 2010

ஊமை சாட்சி

இரவு தொடங்கிய நேற்று
புரை படிந்த பூனையின் ஒற்றை கண்ணை
போல் நிலா
என் நெற்றியின் மேல்  மிதந்தது
என் வீதியின் தனிமையை போக்க
யார் முதலில் கண் சிமிட்டுவார்
என்று அதனிடம் விளையாடிக் கொண்டே நடந்தேன்
என் கண்கள் அசைந்தாலும் சிமிட்டவில்லை
நிலவின் பார்வையில்
அசைவில்லை சலனமில்லை
வெறும் ஒரு பார்வை
தோற்பேனோ என நினைத்து
கண்ணை குறுக்கி ஆழ்ந்து நோக்க
நிலவின் உள்ளே
கசடுகளை தாண்டி
ஒரு குழியில்
தலையை உயர்த்தி ஒருவன்
என்னையே பார்த்திருந்தான்,
கண்களை விலக்கி
நெஞ்சு விம்ம வீட்டுள் ஓடி
தாழிட்டுக் கொண்டேன்
அன்றிரவு என் சுவரில்
நிலவொளியுடன் சேர்ந்து
அவன் பார்வையும்
படர்ந்து கிடந்தது.

Friday, August 20, 2010

இளம் கவிஞனுக்கான கடிதம் - 1

ரெய்னர் மரியா ரில்கே 1875 முதல் 1926 வாழ்ந்த ஜெர்மன் கவிஞர். அவருடைய பல நூறு படைப்புகளாகிய கவிதைகளை போல அவர் பிறருக்கு எழுதிய கடிதங்களும் சிறப்புப் பெற்றவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 1902 முதன் 1908 வரை ஃப்ரான்ஸ் கப்பஸ் என்ற 19 வயது நிரம்பிய 'வியென்னா இராணுவ கல்லூரியின்' மாணவருக்கும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ரில்கே எழுதிய கடிதங்களாகும். இக்கடிதங்கள் பதட்டத்துடன் வாழ்கையை எதிர்நோக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியருமாகிய நண்பர் கூறும் அறிவுரையை போல அமைந்துள்ளன.
1929இல், ரில்கேயின் மரணத்திற்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கப்பஸால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இனி வருவது அக்கடிதங்ககளின் ஸ்டீபன் மிட்செல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.

முதல் கடிதம்

பாரீஸ்,
பிப்ரவரி 17, 1903

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம் சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. நீங்கள் என் மேல் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவ்வளவே என்னால் செய்ய இயலும். உங்களுடைய கவிதை வரிகளை விவாதிக்க எடுக்கப்படும் எவ்வித எத்தனிப்பும் எனக்கு அன்னியமானது. விமர்சனங்களை போல் ஒரு கலைப்படைப்பை பிக குறைவாக தொட்டுச் செல்வது வேறொன்றுமில்லை: [அவை எப்பொழுதும் இறுதியில் தவறான புரிதல்களில் போய் முடிந்து விடுகின்றன.] காரியங்கள் எளிதில் உணரக்கூடியதாகவோ அல்லது விளக்கி சொல்லிவிடக்கூடியதாகவோ இருக்கும் என நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவை அப்படி இருப்பதில்லை; பெரும்பான்மையான அனுபவங்கள் விளக்க முடியாதவை, அவை எந்த சொல்லும் நுழைந்திராத வெளியில் ஏற்படுபவை, மற்றும் மற்ற எல்லாவற்றையும் விட விளக்க முடியாதென்பது, நமது சிறியதும், துரிதமாக கடந்து போகும் வாழ்கையை தாண்டி, ஒரு வாழ்கையை தாங்கிக் கொண்டிருக்கும், புதிர் மிகுந்த இருப்புகளாகிய, கலைப் படைப்புகளேயாகும்.

Sunday, August 8, 2010

தொலைந்தது

உறங்காமல் தூங்கி
விழிக்காமல் எழுந்து
உண்ணாமல் தின்று
பேருந்தின் உபரியாய்
பயணித்து
இயந்திரமாய் உழைத்து
என
ஜன்னலை திறக்க
நான்கு மாதமாயிற்று...
அதனடியில்
முழு நிறத்துடன்
இரு இதழ்களை வைத்துவிட்டு
இயற்கையாய் மரணித்திருந்தது
என் தொட்டிச் செடி